Saturday, 1 December 2018

13.இஸ்லாமிய புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

கீழ் காணும் இணைதலத்தில் இஸ்லாமிய புத்தகங்களைஇலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்ஹம்துலில்லாஹ்.


தமிழ் புத்தகங்களை பெற





































ஆங்கில புத்தகங்களை பெற English hadees books









உருது அரபி புத்தகங்களை பெற 




12.வதந்திகளை நம்பாதீர்கள்

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)

பனூ முஸ்தலக் போர் நடந்து முடிந்திருந்த நேரம் அது. பனூ முஸ்தலக் குலத்தவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை உவந்தெடுத்து, தழுவிக் கொண்டிருந்த நேரம். அவ்வாறு தழுவிக் கொண்டவர்களின் தலைவரான அல் ஹாரித் என்பவரிடம், 'நீங்கள் உங்களது பகுதிக்குச் சென்று விடுங்கள், பின்பு ஒரு நாள் உங்களிடம் ஜகாத் பொருளை வசூல் செய்வதற்காக ஒருவரை அனுப்பி வைக்கின்றேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி அனுப்பி வைத்தார்கள். 

சில காலங்கள் கழித்து அல் வலீத் பின் உக்பா (ரலி) என்ற நபித்தோழரை, இந்த பனூ ஹாரிதாக்களிடம் சென்று ஜகாத் பொருட்களைப் பெற்று வருமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட அல் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள், வழியில் சென்று கொண்டிருக்கும் பொழுது, பனூ ஹாரிதாக்கள் மதீனாவைத் தாக்கும் எண்ணத்துடன் படைகளைத் திரட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கேள்விப்பட்ட அவர், அதனைப் பற்றி தீர ஆய்வு செய்வோம் என்ற நிலையை எடுக்காமல், பயத்துடன் மதீனாவிற்கு வந்து விட்ட அவர், பனூ ஹாரிதாக்கள் ஜகாத் பொருட்களைக் கொடுக்க மறுத்து விட்டதுடன், தன்னைக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி விடுகின்றார்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடுங்கோபங் கொண்டவர்களாக, பனூ முஸ்தலக் கோத்திரத்தவர்களுக்கு எதிராக போர் நடவடிக்கைகளில் இறங்குவதற்காக, மிகப் பெரிய முஸ்லிம் படை ஒன்றையும் திரட்டி விடுகின்றார்கள். இப்பொழுது இரண்டு படைகளும் மதீனாவின் புறநகர்ப் பகுதியில் சந்திக்கக் காத்திருக்கின்றன.
இப்பொழுது அல் ஹாரிதா அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் கொண்டு வரப் பட்டார்கள்.

ஹாரிதாவைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,
ஹாரிதாவே.. நீங்கள் ஏன் ஜகாத் கொடுக்க மறுத்து விட்டீர்கள்?
இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எங்களிடம் ஜகாத் பொருட்களை வசூல் செய்வதற்கென்று யாரும் உங்களிடம் இருந்து வரவில்லை. எனவே, அதனைக் கொடுப்பதற்காகவே நாங்கள் வந்து கொண்டிருந்தோம் என்று தெரிவித்தார்.

இந்த நேரத்தில் தான் மேற்கண்ட வசனத்தை இறைவன் இறக்கி அருளினான் :

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)

அல் ஹாரித் (ரலி) அவர்களிடம் இருக்கின்ற நியாயத்தை ஆராய்ந்து பார்க்கும்படி அறிவுறுத்துவதோடு, முன்பின் ஆய்வு செய்யாமல் வெறுப்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருப்பதோடு, இறையச்சம் கொண்டவர்களுக்கும் இந்த வசனம் எச்சரிக்கையாகவும் அமைந்திருப்பதோடு, எதுவொரு விஷயமானாலும் தீர்க்கமாக விசாரிக்காது எந்தவொரு எதிர் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்கின்றது.

இறைவன் விடுத்த இந்த எச்சரிக்கை குறித்து நம்மில் எத்தனை பேர் கவனத்துடன் செயல்படுகின்றோம்? நமக்கிடையே உலா வரக் கூடிய வதந்திகளை உண்மை என்று நம்பி நம்மில் எத்தனை பேர், விசாரிக்காது எதிர் நடவடிக்கைகளில் இறங்கி விட்டு, பின் உண்மையை உணர்ந்த பின்பு அதற்காக வருத்தப்படுவோர் எத்தனை பேர், அதற்குள் நிகழ்ந்து விட்ட அத்தனை அம்சங்களும் சொந்த சகோதர சகோதரிகளின் மனங்களைக் காயப்படுத்தி, பின் வாழ்க்கையில் என்றுமே முகத்தில் விழிக்க இயலாத அளவு நிலைமை விபரீதமாகச் சென்று விடுகின்ற நிலைமைகளும் நம்மில் இருந்து வருவதை நாம் அறிவோம்.

நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும், நாம் அப்படியே பிறருக்குச் சொல்வது கிடையாது, கிடைத்த தகவல்களில் சில ஒட்டுக்களை வைத்து, அதனை சிறிது மாற்றி மாற்றி இறுதியாகச் சம்பந்தப்பட்டவரை அது அடையும் போது, அதனை அவர் கேட்டு விட்டு கடினமான வார்த்தைகளை உதிர்ப்பதோடு, இன்னும் உடனடியாக பெரும் பாவங்களில் இறங்கி விடக் கூடிய சூழ்நிலைகளும் உருவாகி விடுவதையும், புறம் பேசுவதில் ஆரம்பித்து, அடிதடிகளில் கூட முடியும் சூழ்நிலைகள் உருவாகி விடுவதையும், இன்னும் தான் கேட்ட அந்தப் பொய்ச் செய்தி ஒன்றே அவரது எதிர்நடவடிக்கைக்கான நியாயமாக்கப்படுவதையும் நாம் காணலாம்.

இவ்வாறான சூழ்நிலைகளில், குறிப்பிட்ட அந்த சகோதரரை அல்லது சகோதரியைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுமானால், அவரைக் கண்ட மாத்திரமே அந்தப் பொய்ச் செய்தியின் விளைவாக இவரிடம் உண்டாகி இருக்கின்ற வெறுப்புத் தான் முன்னிற்குமே ஒழிய, இஸ்லாமிய சகோதரத்துவம் முன்னிற்காது, ஏன் ஸலாம் சொல்லாமல் கூட ஒதுங்கி விடக் கூடியவர்களாக மாறி விடுவார்கள்.

குறிப்பிட்ட அந்த சகோதரரின் மீது ஏற்படுகின்ற வெறுப்பும் சந்தேகப் பார்வையும், இருவரும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதனால் விளைந்ததல்ல, யாரோ ஒருவர் வந்து இன்ன மனிதர் உன்னைப் பற்றி இவ்வாறு இவ்வாறு கூறினார் என்று கூறியதன் விளைவேயாகும்.

பல காலங்களாக வளர்ந்து விட்ட வெறுப்புணர்வு மற்றும் இஸ்லாமிய ஒழுக்கப் படுகொலைகள் உண்மையை அறிய விடாமல் நம்மைப் பிற்படுத்துவதோடு, குறிப்பிட்ட நபரை ஏசிய, மற்றும் திட்டித் தீர்த்த வார்த்தைகளை திரும்பப் பெறுவது எவ்வாறு?

ஒருமுறை ஒரு செயலைச் செய்து விட்டாகி விட்டதென்றால், அதனைத் திரும்ப மீட்டுவது என்பது இயலாத காரியமாகி விடும். அதற்காக எவ்வளவு வருந்தினாலும் சரியே, அதற்காக சிரமமெடுத்து பிரயாச்சித்தம் தேடினாலும், ஒருமுறை நம்மால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு அகலுவது என்பதும், நம்மால் பாதிக்கப்பட்டவரின் மனதில் இருந்து துடைத்தெறிவது என்பதும் இயலாத காரியமாகும். இவை யாவும் வதந்திகளால், பொய்யான குற்றச்சாட்டுக்களால் விளைந்தவைகளாகும்.

நாம் எதனைக் கேள்விப்பட்டமோ, அதனை அப்படியே பிறருக்கு எடுத்துரைப்பது என்பதில் எத்தனை கவனமாகச் செயல்படுகின்றோம். இன்றைய தலைமுறையினரின் கையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை பாதுகாத்து வரும் பொறுப்பைச் சுமத்தியிருக்கும் பட்சத்தில், என்ன நடந்திருக்கும் என்பதைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்போமா?

அன்றைய தலைமுறையினர் போல நாம் அவற்றைப் பாதுகாத்திருக்க மாட்டோம், தவிர நம்மிடையே ஆதாரப்பூர்வமான எந்த நபிமொழியும் நம் கைவசம் இருந்திருக்காது என்பதே நிதர்சனமாகும்.

வதந்தி அல்லது தவறான தகவலைப் பெற்றதன் மூலம், ஒரு இறைத்தூதரே இன்னொரு சமூகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தூண்டப்பட்டிருக்கு மென்றால், அதன் மூலம் ஒன்றுமே அறியாத - பாவத்திலும் பழியிலும் சம்பந்தப்படாத மக்கள் அழியவும், இன்னும் நடைபெற இருந்த அந்தப் போரின் மூலமாக சில முஸ்லிம்கள் கூட அழிந்து போகக் கூடிய நிலையும் உருவானதென்று சொன்னால், நம்முடைய நிலைகள் எவ்வாறு என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறான பொய்யான தகவல்கள் தான் மனித மனங்களில் ஏற்படுகின்ற உளநோய்களுக்கான மூல காரணமாக அமைந்து விடுகின்றது. அது இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு மத்தியில் வேற்றுமையையும், வெறுப்புணர்வையும், பகைமையையும் வளர்த்து விடுகின்றது. இறுதியாக இஸ்லாமிய சகோதரத்துவம் என்பதே இல்லாமலாகி விடுகின்ற சூழலுக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டு விடுகின்றது.

எனவே தான் அல்லாஹ், தனது திருமறையில் இவ்வாறான பொய்ச் செய்திகள், வதந்திகள் போன்றவற்றிலிருந்து விலகி இருக்குமாறு, நம்மைப் பணிக்கின்றான். எச்சரிக்கவும் செய்கின்றான். எந்தவித பரிந்துரைகளும் எடுபடாத அந்த மறுமை நாளிலே வல்ல அல்லாஹ்வின் முன்பதாக நாம் நிற்கும் நிலையில், இந்த செயலுக்கான எந்த காரணத்தை அவன் முன் வைக்கப் போகின்றோம்?

அன்றைய தினம் நாம் கேட்கக் கூடிய பாவ மன்னிப்புகள் எடுபடுமா? அல்லது மன்னிப்பைப் பெற்றுத் தருமா?

எனவே, இத்தகைய கொடுமையான செயல்களில் வீழ்ந்து விடாமல் இருக்க நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இன்னும் யாராவது உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வருவாராகில், அந்த செய்தி பற்றிய உண்மைத் தன்மையை அறியாத வரைக்கும், அது பற்றி எந்த கருத்தையும் அல்லது அதற்கான எந்த எதிர்நடவடிக்கையையும் எடுத்து விடாதீர்கள்.
நன்றி தமிழ் இஸ்லாம்.காம்

11.உபரியான தர்மங்கள்

தமிழில் இஸ்லாம் .காமின் நபிமொழி தொகுப்பு- புலுகுல் மராம் என்ற தலைப்பில் இருந்து தாஃவாவிற்காக எடுக்கப்பட்டது

இறைவனுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்த (மறுமை) நாளில் அல்லாஹ் தன்னுடைய நிழலில் ஏழு நபர்களுக்கு இடம் அளிப்பான். (ஹதீஸ் முழுவதும் சொல்லப்பட்டது) அவர்களில் ஒருவர் தன்னுடைய வலக் கை செய்யும் தர்மத்தை தனது இடக் கை அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

(மறுமையில்) மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கப்படும் வரை ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய தர்மத்தின் நிழலில் இருப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான், ஹாம்கி

எந்த முஸ்லிம் ஆடையற்றிருக்கும் என்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு ஆடை அணியச் செய்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பச்சை நிற ஆடையை அணிவிப்பான். எந்த முஸ்லிம் பசியுடனிருக்கும் தன்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு உணவளிக்கின்றாரோ அல்லாஹ் அவரை சுவனத்தின் பழவகைகளை உண்ணச் செய்வான். எந்த முஸ்லிம் தாகித்திருக்கும் தன்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு நீர் புகட்டுகின்றாரோ, அல்லாஹ் (சுவர்க்கத்தில்) அவருக்கு 'அர்ரஹீக்குல் மக்தூம்' எனும் பானத்தை புகட்டுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்

இதன் அறிவிப்புத் தொடர் பலஹீனமானது

மேலிருக்கும் கை கீழிருக்கும் கையை விடச் சிறந்தது. மேலும், நீ தர்மத்தை உன்னுடைய சொந்தபந்தங்களிலிருந்து தொடங்கு தேவைக்குப் போக (மீதம்) உள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். எவர் (பிறரிடம் தர்மம் கேட்காமல்) தன் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறாரோ, அல்லாஹ்வும் அவனுடைய சுயமரியாமையைப் பாதுகாக்கின்றான். எவர் (ம்டைத்ததை வைத்துப்) போதுமென்ற மனத்துடன் (தர்மத்தை ஏற்காமலேயே) இருந்து வருகிறாரோ, அல்லாஹ்வும் அவருக்குப் போதுமென்ற மனத்தையளிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஹக்கிம் இப்னு ஹிஜாம்(ரலி) அறிவிக்கிறார்.

இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

தர்மத்தில் சிறந்தது எது? என்று மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது. நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத் , அஹ்மத்

இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா மற்றும் ஹாம்மில் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மம் செய்யுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் (ஒருநாள்) கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னிடம் ஒரு தீனார் உள்ளது? என்று கூறினார். அதற்கு, நீ அதை உனது செலவுக்கு வைத்துக் கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், என்னிடம் மற்றுமொன்றுள்ளது என்று கூறினார். அதற்கு, நீ உன்னுடைய பிள்ளைகளுக்கு செலவிடு! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், ''என்னிடம் மற்றொன்றுமுள்ளது என்றார். அதற்கு, நீ அதை என்னுடைய ஊழியர்களுக்குச் செலவிடு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், என்னிடம் மற்றொன்றும் உள்ளது என்றார். அதற்கு, அதைப் பற்றி நீயே தீர்மானித்துக் கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
, நஸயீ

இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன் வீட்டு உணவை வீணடிக்காமல் செலவு செய்யும் பெண்ணுக்கு அதைச் செலவிட்ட அளவுக்கு நன்மை உண்டு. அதை சம்பாதித்ததற்காக அவளுடைய கணவனுக்கும் நன்மையுண்டு. அதைப் பாதுகாக்கும் கரு¥லக் காப்பாளருக்கும் அதே போன்ற நன்மை உண்டு. இது போன்றே மற்ற செலவினங்களிலும் நன்மை உண்டு. இவர்களில் எவர் காரணத்தாலும் மற்றவருக்குரிய நன்மை குறைக்கப்பட்டது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் மனைவி ஜைனப்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தர்மம் செய்யுமாறு இன்று தாங்கள் கட்டளையிட்டார்கள். என்னிடம் சில நகைகள் இருந்தன. அவற்றை தர்மம் செய்வதை விட நான் விரும்பினேன். ஆனால் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களோ (நான் செலவிட விரும்புவோரை விட) அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் அதற்கு உரிமையுண்டு என்று கூறிவிட்டார். (நான் என்ன செய்வது) என்று கேட்டார். அதற்கு, மஸ்வூத் உண்மையே சொன்னார். நீ செலவிட விரும்புவோரை விட, உன்னுடைய கணவன் மற்றும் உன் பிள்ளைகள் தாம் அதிகம் உரிமை பெற்றவர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். புகாரீ

எவன் மக்களிடம் (தன் தேவைகளை) எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கின்றானோ, அவன் மறுமை நாளில் தனது முகத்தில் மாமிசத்தின் சிறு துண்டு கூட இல்லாமல் மாமிசத்தின் சிறு துண்டு கூட இல்லாமல் (எலும்புக் கூடாக) வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

தன்னுடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மக்களின் பொருட்களை எவன் யாசித்துக் கொண்டே இருக்கின்றானோ, அவன் நெருப்புக்கங்கையோ கேட்கின்றனர். இனி விரும்பியவர் கூட்டியோ, குறைத்தோ வாங்கி கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்து (விறகுக் கட்டைகளை கட்டி, அதை தன் முதுகில் சுமந்து கொண்டு வந்து, விற்பனை செய்கிறார். அது மக்களிடம் யாசிப்பதை விட்டும் அவரைத் தடுத்து விடுகிறதெனில், அதுவே மக்களிடம் கேட்பதை விட அவருக்குச் சிறந்ததாகும். மக்கள் கொடுத்தாலும் சரி. கொடுக்காவிட்டாலும் சரி என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுபைர் இப்னு அல் அவ்வாம்(ரலி) அறிவிக்கிறார்.

அதிகாரம் உள்ளவரிடமும் தவிர்க்க முடியாத விஷயத்திற்காகவும் தவிர மற்ற யாசகங்கள், ஒரு மனிதன் தன் முகத்தில் தானே ஏற்படுத்திக் கொள்ளும் வடுவாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

10.உபரியான தொழுகைகள்

தமிழில் இஸ்லாம் .காமின் நபிமொழி தொகுப்பு- புலுகுல் மராம் என்ற தலைப்பில் இருந்து தாஃவாவிற்காக எடுக்கப்பட்டது

374 நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, என்னிடம் (ஏதாவது) கேள்! என்று கூறினார்கள். அதற்கு நான் சுவர்க்கத்தில் தங்களது தோழமையை வேண்டுகிறேன் என்று கூறினேன். இதுவல்லாமல் (வேறு ஏதும் கேள்!) என்று அவர்கள் கூறினார்கள். அதற்கு நான், (எனக்கு) அதுவே (வேண்டும்) என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உன் நாட்டம் நிறைவேறிட அதிகம் ஸஜ்தா செய்து எனக்கு உதவி செய் என்று கூறினார்கள் என ரபீஆ இப்னு மாலிக் அறிவிக்கிறார். முஸ்லிம்

375 லுஹர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள், அதற்குப் பின்பு இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் மக்ரிப் தொழுகைக்குப் பின்பு வீட்டில் இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் ஸுப்ஹுவிற்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள் (ஆகிய சுன்னத் தொழுகைகளை) நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

புகாரீ, முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ஜும்ஆவிற்குப் பின்பு வீட்டில் இரண்டு ரக்அத்துக்கள் என்பதும் உள்ளது.

376 ஃபஜ்ருடைய நேரம் வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் சுருக்கமான இரண்டு ரக்அத்துக்களைத் தவிர வேறு எதும் (ஃபர்ளைத் தவிர்த்து) தொழ மாட்டார்கள் என முஸ்லிமில் உள்ளது.

377 'லுஹர்' தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்துக்களையும், ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்களையும் நபி(ஸல்) அவர்கள் (தொழாமல்) விடமாட்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ

378 ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்துக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டிய அளவு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் ஆர்வம் காட்டியதில்லை என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

379 ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகள், உலகம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் விடச் சிறந்தவையாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்துள்ளனர். முஸ்லிம்

380 எவர் இரவிலும் பகலிலும் (சுன்னத்தாக உள்ள) பன்னிரெண்டு ரக்அத்துக்கள் தொழுகிறாரோ, அதன் காரணமாக அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு வீடு, கட்டப்படுகிறது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

மற்றோர் அறிவிப்பில் சுன்னத்தான தொழுகை என்று உள்ளது.

381 திர்மிதீயில் 380 வது ஹதீஸ் போன்றே உள்ளது. மேலும் லுஹருக்கு முன்பு நான்கு ரக்அத்துக்கள். அதற்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள். இன்னும் மக்ரிபிற்குப் பின்பு இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் இஷாவிற்குப் பின்பு இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள் என்பது அதிகமாக உள்ளது.

382 ''எவர் லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்துக்களையும், அதற்குப் பின்பு நான்கு ரக்அத்துகளையும் பேணித் தொழுகின்றாரோ, அல்லாஹ் அவர் மீது நரக நெருப்பை விலக்கி விட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு ஹபீபா(ரலி) அறிவிக்கிறார்கள். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

383 அஸரு(தொழுகை)க்கு முன்பு எவர் நான்கு ரக்அத்துக்கள் தொழுகிறாரோ அவருக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத் மற்றும் திர்மிதீ

இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்திலும் இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

384 மக்ரிபிற்கு முன்பு தொழுங்கள! மக்ரிபிற்கு முன்பு தொழுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்றாவது முறை கூறும் போது ''விரும்பியவர் எனக் கூறினார்கள். மக்கள் அதை (கண்டிப்பான) சுன்னத்தாக ஆக்கிக் கொள்வதை விரும்பாமல் தான் அப்படிக் கூறினார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸ்னீ(ரலி) அறிவிக்கிறார். புகாரீ

385 இப்னு ஹிப்பானுடைய மற்றோர் அறிவிப்பில் மக்ரிபிற்கு முன்பு நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள் என்று உள்ளது.

386 சூரியன் மறைந்ததும் நாங்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுபவர்களாக இருந்தோம். (அதைக் காணும்) நபி(ஸல்) அவர்கள் அவற்றைக் கட்டாயம் தொழுதாக வேண்டும் எனக் கட்டளையிடவுமில்லை தொழக் கூடாதென எங்களுக்கு ஏவுபவர்களாகவும் இல்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள் என முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

387 ''சூரத்துல் ஃபாத்திஹா ஓதினார்களா?' என நான் கேட்கும் அளவிற்கு நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகைக்கு முன்புள்ள இரண்டு ரக்அத்துக்களையும் சுருக்கமாகத் தொழுவார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

388 நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (முன் சுன்னத்தான) இரண்டு ரக்அத்துக்களில் 'குல்யா அய்யுஹல் காஃபிரூன்' மற்றும் 'குல் ஹுவல்லாஹு' ஓதுவார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

389 நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டால் வலப் பக்கமாகச் சாய்ந்து விட்டால் வலப்பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.

390 ''உங்களில் எவரேனும் சுப்ஹுத் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டால், வலப் பக்கமாக ஒருக்களித்து(சிறிது நேரம்) படுக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், அஹ்மத் மற்றும் திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

391 ''இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும். எவராவது காலையாகி விடும் என்று அஞ்சினால், அவர் ஒரு ரக்அத் (வித்ரு) தொழுது கொள்ளட்டும். அது அவர் தொழுத தொழுகையை ஒற்றையாக்கி விடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

392 இரவு மற்றும் பகல் தொழுகைகள் இரண்டிரண்டு ரக்அத்கள் ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, நஸயீ.

மேலும் இது இப்னு ஹிப்பானி ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

393 ஃபர்ளுத் தொழுகைகளுக்குப் பின்பு சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

394 வித்ருத் தொழுகை முஸ்லிம் மீது அவசியமானதாகும். எவராவது ஐந்து ரக்அத்துக்கள் வித்ரு தொழ விரும்பினால் தொழுது கொள்ளட்டும். எவரேனும் மூன்று ரக்அத்துக்கள் தொழ விரும்பினால் தொழுது கொள்ளட்டும். எவரேனும் ஒரு ரக்அத் தொழ விரும்பினாலும் தொழுது கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஅய்åப் அன்சாரி(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், நஸாயீ மற்றும் இப்னு மாஜா.

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நஸாயீயில் மவ்கூஃப் எனும் தரம் மேலோங்கியள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

395 வித்ருத் தொழுகை கடமையாக்கப்பட்ட (ஃபர்ளு) தொழுகை போன்றதல்ல. ஆனால், நபி(ஸல்) அவர்களால் நிறுவப்பட்ட சுன்னத் ஆகும் என்று அலீ அப்னு அபீதாலிப்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீயில் இது ஹஸன் எனும் தரத்திலும், நஸாயீ மற்றும் ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

396 நபி(ஸல்) வேர்ள் ரமளான் இரவில் (பள்ளிவாசலில்) நின்று வணங்கினார்கள். பின்னர் அடுத்துவரும் இரவில் மக்கள் அவர்களை எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் அவர்கள் வெளிவரவில்லை. மேலும், உங்கள் மீது வித்ரு கடமையாக்கப்பட்டு விடுமென நான் அஞ்சுகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான்

397 ''அல்லாஹ் உங்களுக்கு ஒரு தொழுகையை (உங்களின் மற்ற தொழுகைகளுக்கு) வலு சேர்க்கும் விதத்தில் கொடுத்துள்ளான். அது சிவப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அது எந்தத் தொழுகை?'' என்று நாங்கள் வினவினோம். இஷாவிற்கு, ஃபஜ்ரு நேரம் வருவதற்கும் இடையிலுள்ள வித்ருத் தொழுகை என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என காரிஜா இப்னு ஹுதாஃபா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா. இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

398 அம்ர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. அது 397வது ஹதீஸ் போன்றதாகும். அபூ தாவூத். இது லய்யின் (ளஃயீப்) எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

400 அபூஹுரைரா(ரலி) வாயிலாக அஹமதில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் 399வது ஹதீஸ் ளயீஃப் என்பதற்குச் சாட்சியாக உள்ளது.

401 நபி(ஸல்) அவர்கள் ரமலான் மாதத்திலும், அதுவல்லாத நாட்களிலும் பதினோரு ரக்அத்திற்கு மேல் தொழுவார்கள். அதனுடைய அழகையும், நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர் நான்கு ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதனுடைய அழகையும், நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர் நான்கு ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதனுடைய அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர் மூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதனுடைய அழகையும், நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர் மூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள். நான் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் அவர்களே! வித்ருக்கு முன்பு தாங்கள் தூங்குகிறீர்களே! என்று கேட்டேன். அதற்கு, ஆயிஷாவே! என்னுடைய இரண்டு கண்களும் தூங்கும். என்னுடைய இதயம் தூங்காது என்று பதில் கூறினார்களென ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

402 நபி(ஸல்) அவர்கள் இரவில் பத்து ரக்அத்துக்கள் தொழுவார்கள். இன்னும் ஒரு ரக்அத் வித்ருத் தொழுவார்கள். இன்னும் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். இவை தாம் பதிமூன்று ரக்அத்களாகும் என்று புகாரீ, முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ஆயிஷா(ரலி) வாயிலாக இடம் பெற்றுள்ளது.

403 இன்னும் நபி(ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள். அவற்றில் வித்ரு ஐந்து தொழுவார்கள். இறுதியிலன்றி இடையில் எங்கும் அமர மாட்டார்கள் என்று ஆயிஷா(ரலி) வாயிலாக அறிவிக்கப்பட்டு உள்ளது. புகாரீ, முஸ்லிம்

404 நபி(ஸல்) அவர்கள் இரவு முழுவதும் வித்ருத் தொழுதுள்ளார்கள். அவர்களது வித்ரு சஹ்ரு நேரத்தில் முடிவடையும் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரீ, முஸ்லிம்

405 அப்துல்லாஹ்வே! இரவில் நின்று வணங்கிக் கொண்டிருந்து, பின்னர் இரவில் நின்று வணங்குவதை விட்டு விட்ட இன்னாரைப் போன்று ஆகிவிடாதே! என்று நபி(ஸல்) அவர்கள் (எச்சரிக்கையாகக்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னி ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.

406 குர்ஆன் வழங்கப்பட்டவர்களே! வித்ருத் தொழுங்கள். (ஏனெனில்) அல்லாஹ் ஒருவன் அவன் ஒற்றையையே விரும்புகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

407 வித்ரை இரவில் உங்களுடைய தொழுகைகளில் இறுதியானதாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

408 ஒரே இரவில் இரண்டு வித்ருகள் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என தல்க் இப்னு அலீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, மற்றும் திர்மிதீ

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

409 நபி(ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையில் சப்பிஹிஸ்மரப்பிக்கல் அஃலா, குல்யா அய்யுஹல் காஃபிரூன், குல்ஹு வல்லாஹு அஹத் ஆகிய சூராக்களை ஓதுவார்கள் என உபய இப்னு கலஃப்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ

அவற்றின் இறுதியில் தான் ஸலாம் கொடுப்பார்கள் என்பதும் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

410 அபூ தாவூத் மற்றும் திர்மிதீயுடைய (மற்றோர்) அறிவிப்பில் 409வது ஹதீஸ் போன்றே ஆயிஷா(ரலி) வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் ஒவ்வொரு ரக்அத்திற்கும் ஒரு சூராவையும் மற்றும் இறுதி ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹத் மற்றும் முஅவ்வதத்தைன் சூராவையும் ஓதுவார்கள் (அத்தியாயம் 113, 114) என்றும் உள்ளது.

411 நீங்கள் காலை பொழுதையடையும் முன்பு வித்ருத் தொழுது விடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

412 எவரேனும் சுப்ஹை அடைந்தும் வித்ரு தொழவில்லை என்றால் அவருக்கு வித்ரு இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு ஹிப்பானில் இடம் பெற்றுள்ளது.

413 ''எவரொருவர் வித்ருத் தொழாமல் தூங்கிவிட்டாரோ அல்லது அதை மறந்துவிட்டாரோ அவர் சுப்ஹை அடைந்ததும் அல்லது ஞாபகம் வந்ததும் தொழுது கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா

414 இரவின் இறுதிப் பகுதியில் எழ முடியாதென எவர் அஞ்சுகிறாரோ அவர் இரவின் முதல் பகுதியில் வித்ரைத் தொழுது கொள்ளட்டும். எவருக்கு இரவின் இறுதிப்பகுதியில் எழும் நம்பிக்கை உள்ளதோ அவர் வித்ரை இரவின் இறுதிப்பகுதியில் தொழுது கொள்ளட்டும். ஏனெனில், இரவின் இறுதிப் பகுதியின் தொழுகை (இரவு பகல் இரண்டின் வானவர்களாலும்) வருகை தரப்படும். அதுவே சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரழி) அறிவிக்கிறார். முஸ்லிம்

415 ஃபஜ்ர் உதித்துவிட்டால் இரவுத் தொழுகை மற்றும் வித்ருடைய எல்லா நேரமும் போய்விட்டது. நீங்கள் ஃபஜ்ர் உதிப்பதற்கு முன்பு வித்ருத் தொழுது விடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ

416 நபி(ஸல்) அவர்கள் ளுஹா தொழுகை நான்கு ரக்அத்துக்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். இன்னும் அல்லாஹ் நாடிய அளவு அதிகப்படுத்தவும் செய்வார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

417 ஆயிஷா(ரலி) வாயிலாக அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ளுஹா தொழுவார்களா? என்று கேட்கப்பட்டதற்கு, பயணத்திலிருந்து அவர்கள் திரும்பினால் தவிர (தொழுதது) இல்லை என்று முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் உள்ளது.

418 நபி(ஸல்) அவர்கள் ளுஹா தொழுகை தொழுததை நான் ஒரு போதும் கண்டதில்லை. நிச்சயமாக இப்போது நான் இந்த (தொழுகையைத்) தொழுகின்றேன் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார் என்று முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் உள்ளது.

419 வெயிலின் காரணமாக சூடேறிய மணல் (ஒட்டகக் குட்டிகள் கால் வைக்க முடியாத அளவு வெப்பமாக) உள்ள நேரமே அவ்வாபீன் தொழுகைக்குரிய நேரமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜைத் இப்னு அர்கம்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ

420 எவர் ளுஹாவை பன்னிரெண்டு ரக்அத்துக்களாகத் தொழுதாரோ, அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது கரீப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

421 நபி(ஸல்) அவர்கள் என்னுடைய வீட்டில் நுழைந்தார்கள். பின்னர் எட்டு ரக்அத்துக்கள் ளுஹா தொழுதார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான். இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

9.முஸ்லிமின் அடையாளங்கள்

நயவஞ்சகம் கொள்ளமாட்டார் உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும். அதிகமான மக்கள் வஞ்சப் புகழ்ச்சியில் சிக்கிக் கொண்டு தங்களை அறியாமலேயே நயவஞ்சகம் என்ற அழிவில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் பனூ ஆமிர் என்ற கூட்டத்தினர் புகழ்ச்சியாகக் கூறினர்: ''நீங்கள் எங்களது தலைவர்.'' உடனே நபி (ஸல்) அவர்கள் ''தலைவன் அல்லாஹ் மட்டுமே'' என்று கூறினார்கள். அக்கூட்டத்தினர், ''நீங்கள் எங்களில் மிகவும் சிறப்புக்குரியவர், மகத்தான அந்தஸ்துடையவர்'' என்று கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ''உங்களது இந்த வார்த்தைகளை முழுமையாகவோ, அதன் ஒரு பகுதியையோ கூறிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் ஷைத்தானுக்கு துணை போகாதீர்கள்.

நிச்சயமாக அல்லாஹ் என்னை எந்த அந்தஸ்தில் படைத்துள்ளானோ அதைவிட மேலாக நீங்கள் என்னை உயர்த்துவதை நான் விரும்பவில்லை. நான் முஹம்மது இப்னு அப்துல்லாஹ், அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதருமாவேன்'' என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

நபி (ஸல்) அவர்கள்தான் முஸ்லிம்களின் தலைவர், அவர்களில் சிறப்பானவர் என்பது சந்தேகத்துக்கிடமின்றி இருந்தாலும் புகழ்வதை அனுமதித்தால் மக்கள் வரம்பு மீறிச் சென்று புகழுக்குத் தகுதியற்றவர்களை மேன்மைக்குரியவர், தலைவர் என்றெல்லாம் புகழ்ந்து விடுவார்கள் என்பதால்தான், தன்னைப் புகழ்ந்தவர்களை தடுத்தார்கள். மேலும், இம்மாதிரியான புகழ்ச்சிக்கு இடமளித்தால் அது மக்களை நயவஞ்சகத்தனம் என்ற அழிவின்பால் சேர்த்துவிடும்.

இவ்வாறு புகழ்வது பரிசுத்தமான இஸ்லாமின் அடிப்படைக்கு முரண்பட்டதாகும்.

புகழ்பாடுவது, புகழ்பவனை நயவஞ்சகத் தன்மையை நோக்கி இழுத்துச் சென்றுவிடும். அவ்வாறே புகழப்படுபவனை பெருமைக்கு ஆளாக்கிவிடும் என்பதால்தான் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்கள் மனிதர்களின் முகத்துக்கு எதிரே புகழ்வதை தடுப்பவர்களாக இருந்தார்கள்.

அபூ பக்ரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அவரது முகத்துக்கு முன்னால் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ''நீர் நாசமடைவீராக! உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர். உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர்'' என மூன்றுமுறை கூறினார்கள்.

பிறகு, ''எவரேனும் தனது சகோதரரை அவசியம் புகழ்வதாக இருந்தால் அவரைப் பற்றி இவ்வாறு கருதுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன் என்று (மட்டும்) அவர் சொல்லட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே அதைக் கூறவேண்டும். அல்லாஹ்வுக்கு முன் யாரையும் தூய்மையானவர் என்று (எவரும்) கூறவேண்டாம்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கண்டிப்பாக புகழவேண்டிய நிலை ஏற்பட்டால் அந்தப் புகழ், புகழப்படுபவனுக்கு உண்மையில் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும். வரம்பு மீறாமல் கூடுதல் குறைவின்றி நடுநிலையுடன் அமைய வேண்டும். அதன்மூலமே சமூகத்தை பொய், நயவஞ்சகம், ஏமாற்றுதல், முகஸ்துதி போன்ற இழி குணங்களிலிருந்து தூய்மைப்படுத்த முடியும்.

ரஜா (ரஹ்) அவர்கள் மிஹஜன் (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்களும் மிஹஜனும் மஸ்ஜிதில் இருந்தபோது தொழுது ருகூவு, ஸுஜூது செய்து கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவர் குறித்து இவர் யார்? என வினவினார்கள். மிஹஜன் (ரழி) அவரை அதிகம் புகழ ஆரம்பித்து ''இவர் இப்படி, இப்படி சிறப்புக்குரியவர்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் ''போதும். நிறுத்திக்கொள்! அவர் கேட்கும்படி கூறாதே. அவரை அழித்து விடுவாய்'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

முஸ்னத் அஹமத் கிரந்தத்தின் ஓர் அறிவிப்பில் கூறப்படுவதாவது: ''அல்லாஹ்வின் தூதரே! இம்மனிதர் மதீனா வாசிகளில் மிக அழகியவர் என்றோ மதீனாவாசிகளில் மிக அதிகமாகத் தொழுபவர்'' என்றோ கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ''அவர் கேட்கும்படி புகழாதே. அவரை நீ அழித்துவிடுவாய்'' என இரண்டு அல்லது மூன்றுமுறை கூறிவிட்டு நீங்கள் (எல்லா விஷயங்களிலும்) இலகுவானதையே நாடப்பட்ட சமுதாயத்தினர்.'' என்றும் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், 'ஒருவரின் முன்னிலையில் அவரைப் புகழ்வது அழிவை ஏற்படுத்தும்' என்று கூறினார்கள். ஏனெனில் அவ்வாறு தன்னை புகழ்வதைக் கேட்கும்போது மனித மனம் அதை மிகவும் விரும்பும். அதைக் கேட்பவர் அகந்தையும், ஆணவமும் கொண்டு மக்களிடமிருந்து தனது முகத்தை திருப்பிக் கொள்வார்.

புகழ்பவர்களில் சிலர் ஏமாற்றுபவர்களாகவும், பொய்யர்களாகவும், நயவஞ்சகர்களாகவும் இருப்பதால் மீண்டும் மீண்டும் புகழும்போது புகழைக் கேட்பவர்கள் அதில் இன்பமடைய ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குப் பின் அவர்கள் வரம்பு மீறிய புகழைத் தவிர அறிவுரையையும், விமர்சனத்தையும் விரும்பமாட்டார்கள். அப்போது அவர்களது அதிகாரத்தில் சத்தியம் வீணடிக்கப்படும், நீதம் அழிக்கப்படும், மாண்புகள் குழி தோண்டிப் புதைக்கப்படும், சமூகம் சீரழிவைச் சந்திக்கும். இவ்வாறு ஆட்சி அதிகாரங்கள் உடையவர்களை சுற்றி நின்று புகழ்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

நயவஞ்சகமாகப் புகழ்பவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் அதிகரித்து, நயவஞ்சகமும் முகஸ்துதியும் அதிகரித்துவிடக் கூடாது என்பதால் நபி (ஸல்) அவர்கள் புகழ்பவனின் முகத்தில் மண்ணை வீசுமாறு தங்களது தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

ஒரு மனிதர் ஆட்சியாளர்களில் ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசியபோது மிக்தாத் (ரழி) அவர்கள் அம்மனிதரின் முகத்தை நோக்கி மண்ணை அள்ளி வீசிவிட்டுக் கூறினார்கள்: ''அதிகமதிகம் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களது முகத்தில் மண்ணை எடுத்து வீசுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபித்தோழர்கள் இவ்வாறு புகழ்ப்படுவதைக் கேட்டு மிகவும் வெறுப்படைந்தார்கள். தாம் அழிந்து விடுவோம் என்ற அச்சத்தில் அந்தப் புகழ் வார்த்தைகளுக்கு தகுதியுடையவர்களாக இருந்தும் அதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயல்களி லிருந்து விலகி இஸ்லாமின் தூய பண்புகளைப் பெற்றிருந்தார்கள்.

நாபிஃ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களை ''மனிதர்களில் மிகச் சிறந்தவரே! அல்லது மனிதர்களில் மிகச் சிறந்தவரின் மகனே!'' என்று அழைத்தார். இப்னு உமர் (ரழி) அவர்கள் ''நான் மனிதர்களில் சிறந்தவனுமல்ல, மிகச் சிறந்த மனிதரின் மகனுமல்ல.

அல்லாஹ்வின் அடிமைகளில் ஒருவன். அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைக்கிறேன். அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு மனிதனை அழிக்காதவரை நீங்கள் ஓயமாட்டீர்கள்'' என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

இது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து அந்தரங்கத்திலும் பகிரங்கத்திலும் அவர்களது வழிமுறையை முழுமையாக பின்பற்றிய பிரபல நபித்தோழரின் விவேகமான பதிலாகும். நயவஞ்சகத் தன்மையை வெற்றி கொள்வதற்கென நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த நேர்வழியைப் பின்பற்றிய நபித்தோழர்கள் இது விஷயத்தில் மிகக் கவனமாக இருந்தார்கள்.

அவர்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக மனத்தூய்மையுடன் செய்யப்படும் அமல்களுக்கும், நயவஞ்சகத்தனத்துடன் செய்யப்படும் செயல்களுக்கு மிடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக அறிந்திருந்தார்கள்.

இப்னு உமர் (ரழி) அவர்களிடம் சிலர்: ''அதிகாரத்தில் உள்ளவர்களிடம் நாங்கள் செல்லும்போது அவர்களிடமிருந்து வெளியேறிய பின் எதைக் கூறுவோமோ அதற்கு மாற்றமாக அவர்களிடம் பேசுகிறோம்'' என்றார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் ''நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இதை நயவஞ்சகத்தனம் எனக் கருதினோம்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

முகஸ்துதியிலிருந்து விலகியிருப்பார் உண்மை முஸ்லிம் முகஸ்துதியிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். ஏனெனில், அவை நற்கூலியை அழித்து நற்செயல்களை வீணாக்கிவிடும்.

மகத்தான இரட்சகனின் முன்னிலையில் நிற்கும் மறுமை நாளில் இழிவை தேடித்தரும். இத்தூய மார்க்கத்தின் அடிப்படைகளில் தலையாயது, மனிதனின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மனத் தூய்மையுடன் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.

ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 52:56)

எந்த வணக்கமும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யப்பட்டால் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.

(எனினும் அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து அல்லாஹ் ஒருவனையே வணங்கி தொழுகையையும் கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறேயன்றி (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98:5)

தங்களது பொருளை ஏழைகளுக்கு செலவு செய்யும்போது அதை சொல்லிக் காண்பித்து ஏழைகளின் கண்ணியத்தை காயப்படுத்துபவர்களை அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கிறான். முகஸ்துதி கலந்துவிட்டால் அவ்வணக்கம் வீணாகிவிடும்.

விசுவாசிகளே! நீங்கள் உங்களுடைய தர்மத்தை (ப்பெற்றவனுக்கு) இகழ்ச்சியையும், துன்பத்தையும் (செய்வது) கொண்டு (அதன் பலனை) வீணாக்கிவிடாதீர்கள். அவ்வாறு (செய்பவன்) அல்லாஹ்வையும் கடைசி நாளையும் விசுவாசம் கொள்ளாது (தான் தர்மவான் என்பதைப் பிற) மனிதர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு தன் பொருளை செலவு செய்து (வீணாக்கி) விட்டவனுக்கு ஒப்பாவான். அவனுடைய உதாரணம்; ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன்மீது மண் படிந்தது. எனினும் ஒரு பெரும் மழை பொழிந்து அதை (க் கழுவி) வெறும் பாறையாக்கிவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்). ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததிலிருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:264)

ஏழைகளுக்கு தான் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது, அந்த தர்மத்தின் நற்பலன்களை வழுக்குப் பாறையில் ஒட்டியிருந்த மணலை பெரும் மழை அடித்துச் சென்றுவிடுவதுபோல அழித்து விடுகிறது. புகழுக்காக தர்மம் செய்பவர் அல்லாஹ்வின் நேர்வழிக்குத் தகுதியற்றவர், அவர் நிராகரிப்பாளர்களுடன் இணைக்கப்பட்டு விடுவார் என்பதை இந்த வசனத்தின் பிற்பகுதி சுட்டிக் காட்டுகிறது.

''மேலும் அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் ஜனங்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.''

முகஸ்துதிக்காரர்கள், மனிதர்கள் தங்களைப் புகழவேண்டும் என்பதற்காக நல் அமல்களைச் செய்வார்கள். மகத்தான இரட்சகனின் திருப்பொருத்தத்தை நாடமாட்டார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்...

அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர் களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே அன்றி அல்லாஹ்வை தியானிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:142)

அவர்கள் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கிதன் காரணமாக அவர்களது அமல்கள் மறுக்கப்படும். தனது திருப்தியை நாடி, தூயமனதுடன் செய்யப்படும் அமல்களை மட்டுமே அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான்.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்: அல்லாஹ் கூறுகிறான், ''நான் இணைவைப்பவர்களின் இணையை விட்டும் தேவையற்றவன். ஒருவன் ஏதேனும் அமல் செய்து என்னுடன் மற்றெவரையும் கூட்டாக்கினால் நான் அவனை அவனது இணைவைக்கும் செயலுடன் விட்டு விடுகிறேன்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)


தூய இதயத்துடன் வருவது தவிர வேறெந்த செல்வமும் மக்களும் பலனளிக்காத அந்நாளில் முகஸ்துதிக்காரர்கள் சந்திக்கும் இழிவையும் வேதனையையும் நபி (ஸல்) அவர்கள் விவரித்துக் கூறினார்கள்: 

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன். ''மறுமை நாளில் முதன் முதலாக தீர்ப்பளிக்கப் படுபவர்களில் ஒருவன் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட தியாகி. அவன் கொண்டு வரப்பட்டு அவனுக்கு உலகில் அருளப்பட்ட அருட்கொடைகள் எடுத்துரைக்கப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் அதைக் கொண்டு என்ன அமல்களைச் செய்தாய் என்று கேட்கப்படும். ''அவன் உனக்காக போர் செய்து ஷஹீதாக்கப்பட்டேன்'' என்று கூறுவான். அல்லாஹ் ''நீ பொய் சொல்கிறாய். நீ வீரன் என்று புகழப்படுவதற்காக போர் செய்தாய். அவ்வாறு உலகில் சொல்லப்பட்டு விட்டது'' என்று கூறிவிடுவான். பிறகு, முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.
மற்றொரு மனிதன் கல்வியைக் கற்று பிறருக்கு கற்றுக் கொடுத்தான். குர்ஆனை ஓதியிருந்தான். அவன் கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அதை ஒப்புக் கொள்வான். அல்லாஹ் ''அதன்மூலம் என்ன அமல்களைச் செய்தாய்?'' என்று கேட்பான். அவன் ''நான் கல்வியை கற்று பிறருக்குக் கற்றுக் கொடுத்தேன். உன் திருப்திக்காகவே குர்ஆனை ஓதினேன்'' என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் ''நீ பொய் சொல்கிறாய். நீ ஆலிம் என்று புகழப்படுவதற்காக கல்வி கற்றாய், காரி என்று புகழப்படுவதற்காக குர்ஆனை ஓதினாய், அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது'' என்று சொல்வான். பிறகு அவனை முகம்குப்புற நரகில் வீசி எறியுமாறு உத்தரவிடப்படும்.

இன்னொரு மனிதன், அல்லாஹ் அவனுக்கு உலகில் பல்வேறு அருட்கொடைகளை வழங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தியிருந்தான். அவனைக் கொண்டு வரப்படும். அவனுக்கு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் ''அதைக்கொண்டு என்ன அமல்களைச் செய்தாய்?'' என்று கேட்கப்படும். அவன் ''எந்த வழிகளில் செலவு செய்வது உனக்குப் பிரியமானதோ அந்த அனைத்து வழிகளிலும் நான் செலவு செய்தேன்'' என்று கூறுவான். ''அல்லாஹ் நீ பொய் சொல்கிறாய், நீ கொடைவள்ளல் என புகழப்படுவதற்காக செய்தாய், அவ்வாறு உலகில் சொல்லப்பட்டுவிட்டது'' என்று கூறுவான். பிறகு அவனை முகம்குப்புற இழுத்துச்சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த நபிமொழி தர்மம், வீரம், ஞானம் போன்ற நல் அமல்களில் தீய எண்ணங்களைக் கலந்து விடுவதால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது. தீய எண்ணத்துடன் அமல் செய்வதால் மகத்தான அந்நாளில் அகில உலக மக்களுக்கு முன்னால் அகிலங்களின் இரட்சகனால் கடும் தண்டனை வழங்கப்படுவது எவ்வளவு பெரிய இழிவு? அவர்கள் செய்த அமல்கள் தூய எண்ணத்துடன் அமைந்திருந்தால் எத்தகு நன்மைகளைப் பெற்று சுவனத்தில் நுழைவிக்கப்படுவர்களோ! அந்த அனைத்து நன்மைகளும் உரியப்பட்டு மாபெரும் இழிவும், கேவலமும் சூழ்ந்த நிலையில் முகங்குப்புற நரகில் வீசி எறியப்படுவ தென்பது ஈடுசெய்யவே இயலாத மகத்தான இழப்பல்லவா?

மார்க்கச் சட்டங்களை அறிந்த பேணுதலுள்ள முஸ்லிம் தனது அனைத்து செயலிலும் முகஸ்துதியிலிருந்து விலகி, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவர் பெருமைக்காக அமல் செய்கிறாரோ அல்லாஹ் அவரை மறுமையில் இழிவுபடுத்துவான். எவர் முகஸ்துதிக்காக அமல் செய்வாரோ மறுமை நாளில் அல்லாஹ் அவரது குற்றங்களை பகிரங்கப்படுத்துவான்.'' (ஸஹீஹுல் புகாரி)

உறுதிமிக்கவர் உண்மை முஸ்லிம் நேர்வழி பெற்றவராக, தெளிவான சிந்தனை உடையவராக இருப்பார். சத்தியத்தைவிட்டும் முகம் திருப்புவதை, சத்தியத்தை மறைப்பதை, பொய் கூறி மக்களை ஏமாற்றுவதை அவர் விரும்பமாட்டார். சத்தியத்தின் மீது நிலைத்திருப்பதில் ஏற்படும் சிரமங்கள், துன்பங்களின் காரணமாக சங்கடமோ, சஞ்சலமோ, தடுமாற்றமோ இல்லாமல் சமூக வாழ்வில் அதை எளிதாக எதிர்கொள்வார்.

சத்தியத்தில் நிலைத்திருப்பது, அவரது வாழ்வில் விரும்பினால் கைக்கொள்வது, விரும்பாவிட்டால் விட்டுவிடுவது என்பது போன்ற சடங்கல்ல. மாறாக, ஈமானுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் பெற்ற, அல்லாஹ் இன்னும் அவனது தூதரால் கட்டளையிடப்பட்ட மிக அவசியமான பண்பாகும்.

எனினும் எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து (அவர்களை நோக்கி) ''நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்'' என்றும், 
''நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு உதவியாக இருந்தோம்; மறுமையிலும் (உங்களுக்கு உதவியாளர்களே) சுவனபதியில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்'' என்றும் ''பாவங்களை மன்னித்து கிருபை செய்வோனின் விருந்தாளியாக அதில் (தங்கி) இருங்கள்'' என்றும் (மலக்குகள்) கூறுவார்கள். (அல்குர்ஆன் 41:30,31,32)

உறுதியுடன் நிலைத்திருக்கும் இறை விசுவாசிகளுக்குத்தான் எவ்வளவு மகத்தான நற்கூலி! மறுமை நாளில் அவர்களின் அந்தஸ்து எவ்வளவு மகத்தானது! அவர்களுக்கு மலக்குகள் அளிக்கும் வரவேற்பும் நற்செய்தியும் எவ்வளவு அழகானது என்பதைப் பாருங்கள்!

ஏனெனில் உறுதியாக நிலைத்திருப்பது கடினமான காரியமாகும். இது அல்லாஹ்வின் திருப்தியை நோக்கமாகக் கொண்ட இறையச்சமுள்ள உண்மை முஃமின்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். அவர்கள் தீமைகளுக்கு அடிபணியமாட்டார்கள். இவ்வுலகில் மனிதனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இன்பங்கள், ஆட்சி அதிகாரங்கள், பட்டம் பதவி, செல்வங்களுக்கும் அடிபணிய மாட்டார்கள். இதன் காரணமாகத்தான் அவர்கள் அல்லாஹ்விடம் மகத்தான நன்மைகளை அடைந்து கொள்வார்கள்.

''நிலையாக இருப்பது'' என்பதன் பொருளை நபி (ஸல்) அவர்கள் மிக ஆழ்ந்து அறிந்ததன் காரணமாகத்தான் அது அவர்களை மிகவும் பாதித்தது. இதுவே நிலையாக இருப்பதென்பது சிரமமானது என்பதற்கு ஆதாரமாகும்.

(நபியே!) உமக்கு ஏவப்பட்ட பிரகாரம் நீரும், உம்முடன் இருக்கும் இணைவைத்து வணங்குவதிலிருந்து விலகியவரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள்... (அல்குர்ஆன் 11:112)

இந்த திருவசனத்தின் விரிவுரையில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ''திருகுர்ஆனின் அனைத்து வசனங்களிலும் இந்த வசனத்தைப் போன்று நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த கடினத்தையும், சிரமத்தையும் அளித்த வேறெந்த வசனமும் கிடையாது'' என்று குறிப்பிடுகிறார்கள்.

அதனால்தான் நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள் தலைமுடி விரைவாக நரைத்துவிட்டதன் காரணத்தை விசாரித்தபோது நபி (ஸல்) அவர்கள், ''என்னை ஹுது (என்ற சூராவு)ம் அது போன்ற கருத்துடைய சூராக்களும் எனக்கு நரையை ஏற்படுத்திவிட்டது'' என்று கூறி மேற்கண்ட வசனத்தை சுட்டிக்காட்டினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

எனினும் எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ... (அல்குர்ஆன் 41:30)

அல்லாஹ்வின் இந்த சொல்லுக்கு ஒப்பாகவே ரசூலுல்லாஹ்ி (ஸல்) அவர்கள் ஸுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்களுக்கு உபதேசித்தார்கள். ஸுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரழி) ''அல்லாஹ்வின் தூதரே! இனிமேல் இஸ்லாமைப் பற்றி யாரிடமும் கேட்கத் தேவைப்படாத வகையில் எனக்கு ஓர் உபதேசத்தைக் கூறுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''ஆமன்த்து பில்லாஹ் (அல்லாஹ்வை விசுவாசித்தேன்) என்று சொல்லி அதில் உறுதியாக இரு'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இமாம் முஸ்லிம் (ரழி) அவர்கள் தனது தொகுப்பில் 'உறுதியாக இருப்பது' என்று தலைப்பிடுவதற்குப் பதிலாக 'இஸ்லாமியப் பண்புகளை ஒருங்கிணைக்கும் தன்மை' எனத் தலைப்பிட்டு, அதன் கீழ் இந்நபி மொழியைக் குறிப்பிடுகிறார்கள்.

ஏனெனில் 'உறுதியாக இருப்பது' என்பதில்தான் பல்வேறு மாண்புகளும், நற்குணங்களும் ஒன்றிணைந்துள்ளன.

'இஸ்திகாமத்' உறுதியாயிருப்பதில் முதன்மையான பண்பாகிறது முஸ்லிம் ஒரே முகத்துடன் மனிதர்களை சந்திப்பவராக இருக்க வேண்டும். வஞ்சகர்கள், மோசடிக்காரர்களைப் போன்று நிறம் மாறக்கூடாது என்பதாகும்.

நபி (ஸல்) அவர்கள் அருளியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''மனிதர்களிலேயே மிகக் கெட்டவன் இரட்டை முகமுடையவன். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நன்றி: http://www.readislam.net/idealmuslim9n.htm


8.தீயகுணங்கள் 2 கொடுமை

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: இறுதித் தீர்ப்புநாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாய் ஆகிவிடும். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (புகாரி)

அறிவிப்பாளர் : அவ்ஸ் பின் ஷுரஹ்பீல் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: ஒருவன் ஒரு கொடுமைக்காரனுக்கு அவன் கொடுமைக்காரன் என்பதை அறிந்திருந்தும் துணைபுரிந்து வலுவூட்டினால், அவன் இஸ்லாத்தைவிட்டு வெளியேளிவிட்டான். (மிஷ்காத்)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், வறியவன் (பஞ்சைப்பராரி) என்பவன் யார்? என்று வினவினார்கள். மக்கள், எவரிடம் திர்ஹாமோ (வெள்ளி நாணயமோ) வேறெந்தப் பொருளுமோ இல்லையோ, அவரே எங்களில் வறியவர் ஆவார் என்று கூறினர். அண்ணலார் பதிலளித்தார்கள்: ஒருவன் மறுமைநாளில் தன் தொழுகையுடனும், நோன்புடனும் அல்லாஹ்விடம் ஆஜராவான். அவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான், எவர் மீதாவது இட்டுக்கட்டி அவதூறு கூறியிருப்பான், 

எவரேனும் ஒருவரின் செல்வததைப் பறித்துத் தின்றிருப்பான், எவரையேனும் கொன்றுவிட்டிருப்பான், எவரையேனும் நியாயமின்றி அடித்திருப்பான். எனவே, அந்த அநீதிக்குள்ளானவர்கள் அனைவரிடையேயும் அவனது நன்மைகள் பங்கிடப்பட்டுவிடும். பிறகு அவனது நன்மைகள் தீர்ந்துபோய், அநீதிக்குள்ளானவர்களின் உரிமைகள் இன்னும் எஞ்சியிருந்தால் அவர்களின் பாவங்கள் அவனது கணக்கில் எழுதப்பட்டுவிடும். பிறகு, அவன் நரகத்தில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையில் பஞ்சைப்பராரி ஆவர். (முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அலீ (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை. (மிஷ்காத்)

கொடுமைக்காரனின் இந்த அநீதியின் காரணமாக அவனை இறைவன் பல்வேறு வகையான ஆபத்துகளில் அமைதியின்னைகளில் ஆழ்த்திவிடுகின்றான்.

7.தீயகுணங்கள் 1 தற்பெருமை


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: எவனுடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ, அவன் சுவனத்தில் நுழைய முடியாது. இதனைச் செவியுற்ற ஒரு மனிதர் கேட்டார் மனிதன் தன் ஆடைகளும் காலணியும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானே? (இதுவும் தற்பெருமையா? இத்தகைய அழகுணர்ச்சி கொண்ட மனிதன் சுவனப்பேற்றை அடைய முடியாதா?' அண்ணலார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: (இல்லை, இது தற்பெருமையில்லை) அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்விற்கு நாம் அடிபணிந்து வாழவேண்டிய கடமையை நிறைவேற்றாமலிருப்பதும், பிற மக்களை இழிவாகக் கருதுவதும் ஆகும். அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) (முஸ்லிம்)

அறிவிப்பாளர் : ஹாரிஸ் பின் வஹ்ப் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான். (அபூதாவூத்)

நான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவிலக் கேட்டேன்: இறைநம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி, கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இதனை (இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்;துவமும் தெளிவாகிவிடட்டும் என்பதற்காக) அண்ணலார் மூன்று முறை கூறினார்கள். பிறகு அகந்தையுணர்வினால் தன் கீழங்கியைப் பூமியில் இழுத்தவண்ணம் நடக்கும் மனிதனை இறைவன் மறுமைநாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான் என்று அண்ணலார் கூறினார்கள். (அபூதாவூத்)

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: எவன் தன் கால்சட்டையை கர்வத்துடன் பூமியில் இழுத்துச் செல்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமைநாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (கருணைப் பார்வை பார்க்கமாட்டான்) 

அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் வினவினார்கள்: நான் பிடித்து வைத்த வண்ணம் இருக்காவிட்டால் என் வேட்டிதளர்ந்து கணுக்கால்களுக்குக் கீழே போய்விடுகின்றது. (நானும் என் இறைவனின் கருணைப் பார்வையை இழந்து விடுவேனா அதற்கு அண்ணலார் இல்லை நீர் கர்வத்தால் வேட்டியை இழுத்துச் செல்பவரல்லர். (எனவே இறைவனின் அருட்பார்வையை நீர் இழக்கமாட்டீர்) என்று பதிலளித்தார்கள். (புகாரி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள், விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக்கூடாது. (புகாரி)