Saturday, 1 December 2018

6.ரமலான் மாத நோன்பின் சிறப்புகள்

1.ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின்(சுவனத்தின்) கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹூரைரா(ரலி) : புகாரி

2.அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமலான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர் பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹூரைரா(ரலி) : புகாரி

நோன்பின் சிறப்புகள்

நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும். ஆகவே நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக்கூடாது. இன்னும் இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களையும் செய்யக்கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி என்று கூறட்டும். என் உயிர் எவனிடம் இருக்கின்றதோ அந்த இறைவன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும் (காரணம்) தன்னுடைய உணவையும், பானத்தையும் இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகிறான். நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுகின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹூரைரா(ரலி) : புகாரி

சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு அர்ரய்யான் என்று சொல்லப்படும், மறுமை நாளில் அதில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழையமாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று அழைக்கப்படும் அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசல் வழியாக நுழையமாட்டார்கள், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஸஹ்ல்(ரலி) : புகாரி

ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே பரிசளிப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது மற்றொன்று தன் இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும், என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி

யார் ரமலான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) : புகாரி

நோன்பின் நோக்கம்

பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டுமென்பதற்காகத்தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர். பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை, அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறு இல்லை.

பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அவறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் பணக்காரர்களேயானாலும் நோன்பு நோற்காமலே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன எனவே இந்தக் காரணம் முற்றிலும் தவறாகும்.

உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்பது தான் நோன்பின் நோக்கம் என்பர் வேறு சிலர் அதுவும் தவறு.

நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்திற்;;காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை. மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில் நீங்கள் இறையச்சமுடையோராவதற்காக என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். ஏற்படவேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.

நமக்குச் சொந்தமான உணவை பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து கொள்கிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி எற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப்போவது இல்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்கா விட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும். அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதாலேயே நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்கவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஓதுக்கும் நாம் ரமலான் அல்லாத மற்ற மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.

ஹராமான காரியங்களில் ஈடுபடும் பொழுது இறைவனுக்குப் பயந்து ஹலாலானதையே நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த ஆன்மீகப் பயிற்சிதான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபி(ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.

1.ஹதீஸ்: யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு; விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி, அஹமத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா

2.ஹதீஸ்: உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் முட்டாள் தனமாக நடந்து கொண்டால் நான் நோன்பாளி என்று கூறிவிடுங்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி, திர்மிதி

புகாரியின் மற்றும் சில அறிவிப்புகளில் யாரேனும் சண்டைக்கு வந்தால் யாரேனும் திட்டினால் என்று கூறப்பட்டுள்ளது.







No comments:

Post a Comment